பாட்னா: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத்துக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளார்.
இதற்காக, ராஞ்சியில் இருந்து ரயில் மூலம், நேற்று மாலை ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் தில்லி புறப்பட்டுச் சென்றார்.
ராஞ்சியில் இருந்து தில்லிக்கு விமானத்தில் செல்ல விரும்பிய லாலு பிரசாத் யாதவின் கோரிக்கையை ஜார்க்கண்ட் மாநில உள்துறை அமைச்சகம் நிராகரித்ததால், அவர் ரயில் மூலம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
69 வயதாகும் லாலு பிரசாத் யாதவ், 4 கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் சிறைத் தண்டனை பெற்று கடந்த டிசம்பர் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மார்ச் 17ம் தேதி இவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயர் சிகிச்சைக்காக எய்ம்ஸ் செல்ல முடிவு செய்யப்பட்டது.
அதற்காக, லாலு பிரசாத் நேற்று மாலை தனது உதவியாளர்களுடன் ராஜ்தானி விரைவு ரயிலில் தில்லி புறப்பட்டுச் சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.