புதுதில்லி: அரசியல் லாபத்துக்காக எடுக்கப்பட்ட தவறான முடிவு என்று அம்பேத்காரின் பெயரை மாற்றி பிறப்பிக்கப்பட்ட உத்தரபிரதேச அரசின் உத்தரவை அவரது பேரன் பிரகாஷ் அம்பேத்கார் விமர்சித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் அரசு ஆவணங்களில் இனி அம்பேத்காரின் பெயரை 'ராம்ஜி' அம்பேத்கார் என சேர்க்க வேண்டும் என்று அம்மாநில அரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
இந்நாள் வரை டாக்டர் பீம்ராவ் அம்பேத்கார் என்ற குறிப்பிட அவரை இனி டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார் என்றே இனி குறிப்பிட வேண்டும் என உத்தரப்பிரதேச அரசு ஆணை பிறப்பித்துள்ளது. உத்தரப்பிரதேச கவர்னர் ராம் நாயக் பரிந்துரையை ஏற்று, உத்தரப்பிரதேச அரசு அம்பேத்காரின் பெயரை மாற்றி அமைக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் அரசியல் லாபத்துக்காக எடுக்கப்பட்ட தவறான முடிவு என்று அம்பேத்காரின் பெயரை மாற்றி பிறப்பிக்கப்பட்ட உத்தரபிரதேச அரசின் உத்தரவை அவரது பேரன் பிரகாஷ் அம்பேத்கார் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
பாரதிய ஜனதா கட்சியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சேர்ந்து இனி அனைத்து அரசுத் துறைகளிலும், லக்னௌ மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றங்களிலும் அம்பேத்காரின் பெயரை 'ராம்ஜி' அம்பேத்கார் என சேர்க்க வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
இது பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சேர்ந்து செய்த தவறான முடிவு. அவர்கள் அரசியல் லாபத்திற்காகவே இதனைச் செய்துள்ளார்கள். கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிராவில் அவர் 'பாபாசாகேப்' என்றும், இதர வடமாநிலங்களில் 'பாபா பீம்ராவ்' என்றும்தான் அழைக்கப்படுகிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.