
இந்திய-சீன உறவு மேம்படுவதற்கு இரு தரப்பும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வது முக்கியமானது என்று சீனாவுக்கான இந்தியத் தூதர் கெளதம் பம்பாவாலே தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரதமர் மோடி, சீனாவுக்கு சென்று அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், பம்பாவாலே இவ்வாறு கூறியிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தில்லியில் 8-ஆவது சுற்று இந்திய-சீன பேச்சுவார்த்தை புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கெளதம் பம்பாவாலே கூறியதாவது:
இந்திய-சீன எல்லையில் அமைதி நிலைநாட்ட வேண்டியது மிகவும் முக்கியமாகும். தொடர்ந்து பேச்சு நடத்துவதன் மூலம்தான் அமைதி சாத்தியமாகும். இரு தரப்பும் ஒருவர் மற்றொருவரது நலன்களை புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என்பது முக்கியமானது. இந்த புரிந்துணர்வு வர வேண்டும் என்பதற்காகவே பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இப்போது நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு மேம்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அண்மையில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் வூஹான் நகரில் சந்தித்து பேசினர். அப்போது, இரு தலைவர்களும் இரு தரப்பு உறவு மட்டுமின்றி, சர்வதேச விவகாரங்கள் குறித்தும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இரு நாடுகளும் அரசியல்ரீதியாகவும், வர்த்தகரீதியாகவும் இணைந்து செயல்படுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இருவரும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இதன் மூலம் இரு நாடுகளின் உறவு தொடர்பாக முன்பு நீடித்து வந்த சந்தேகங்கள் அனைத்தும் விலகியது. அரசியல் தலைவர்கள் நிலையில் மட்டுமல்லாது, இப்போது நடைபெற்றதுபோன்று இரு நாடுகளைச் சேர்ந்த சிந்தனையாளர் அமைப்புகள், ராணுவ அதிகாரிகள், வெளியுறவுத் துறை செயலர்கள், தொழில் நிறுவனங்கள் இடையே பேச்சு நடைபெற வேண்டும். அப்போது, அனைத்து துறைகளிலும் இரு நாடுகள் இடையே சிறப்பான நல்லுறவு ஏற்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







