ஓய்வூதிய படிவத்தில் "செல்ஃபி' படத்தை பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெறுவதற்கு 8 மாதங்களுக்கு முன் தலைமை அலுவலகத்தில் இருந்து ஓய்வூதிய படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். அந்த படிவத்தில், தங்களது வாழ்க்கைத் துணையுடன் இருக்கும் படத்தையும் இணைக்க வேண்டும்.
இந்நிலையில், இந்த படிவத்தை நிரப்பும்போது செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது தொடர்பான புதிய அறிவுறுத்தல்களை மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செல்லிடப்பேசியில் எடுக்கப்படும் "செல்ஃபி' படத்தை, ஓய்வூதிய படிவத்தில் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கண்ணாடி அணிந்த படத்தையோ, நெற்றியை மறைக்கும் அளவுக்கு முடியுடன் இருப்பது போன்ற படங்களையோ பயன்படுத்தக் கூடாது; கறுப்பு - வெள்ளை படத்தை பயன்படுத்தக் கூடாது. படிவத்தில் குறிப்பிடப்பட்ட அளவுக்கு படமும் கையெழுத்தும் இருக்க வேண்டும்.
ஓய்வூதிய படிவத்துக்கு ஒப்புதல் அளிப்பதில் எந்த கால தாமதமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 61.17 லட்சம் ஓய்வூதியர்களும் உள்ளனர்.