கர்நாடக முதல்வராக எடியூரப்பா வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் வஜுபாய் வாலா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கர்நாடகத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
இந்நிலையில், கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
பெங்களூரு சட்டப் பேரவை வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூனே கார்கே, அசோக் கெலோட், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பங்கேற்பதற்காக சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏ-க்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டனர்.
மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏ-க்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். பெரும்பான்மையில்லாத நிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதாக கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் போது, அரசியலமைப்புக்கு எதிராக பாஜக செயல்படுவதை மக்களிடம் எடுத்து கூறுவோம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.