கர்நாடக முதல்வராக எடியூரப்பா வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் வஜுபாய் வாலா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கர்நாடகத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
இதன்மூலம் கர்நாடகத்தின் 23-ஆவது முதல்வரானார். 2007 மற்றும் 2008-க்குப் பிறகு தற்போது மீண்டும் 3-ஆவது முறையாக எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் தற்போதைக்கு எடியூரப்பா மட்டுமே முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர், ஜெ.பி. நட்டா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆட்சி அமைக்க பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) - காங்கிரஸ் கூட்டணி என இரு தரப்பும் உரிமை கோரியிருந்த நிலையில், 104 எம்எல்ஏக்கள் வைத்துள்ள பாஜகவை ஆளுநர் வஜுபாய் வாலா ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் அளித்துள்ளார்.