மத்திய அரசு 4 ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து அதன் சாதனைகள் அடங்கிய புத்தகம் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அமைச்சர்கள் வி.கே.சிங் மற்றும் எம்.ஜே.அக்பர் ஆகியோர் புதுதில்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:
டோக்லாம் விவகாரத்தில் இரு தரப்பிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தற்போதைய நிலை அப்படியே தொடர்கிறது. பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என நாங்கள் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் அதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியுள்ளது.
பயங்கரவாதமும், அமைதிப் பேச்சுவார்த்தையும் ஒருசேர நடைபெறாது. பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களால் நமது நாட்டின் ராணுவ வீரர்கள் கொல்லப்படுகின்றனர். அவ்வாறு இருக்கையில் அமைதிப் பேச்சுவார்த்தை என்பது அர்த்தமுள்ளதாக இருக்காது என்றார்.