
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பஞ்சாப் விவசாயிகள் டிராக்டர் பேரணியை செவ்வாய்கிழமை நடத்தினர்.
நாடு முழுவதும் கடந்த 15 நாட்களாக (கர்நாடக தேர்தலுக்குப் பின்னர்) பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.80-க்கும் அதிகமாக உயர்ந்த நிலையில், பலதரப்பட்ட மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் சம்ரலாவில் விவசாயிகள் அனைவரும் டிராக்டர் பேரணி நடத்தினர். பாரதிய கிஸாண் சங்கம் நடத்திய இப்பேரணி தொடர்பாக அதன் தலைவர் பல்பீர் சிங் ரெஜ்வால் கூறியதாவது:
ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு டிராக்டருக்கு சராசரியாக 10 லிட்டர் டீசல் செலவாகும். தற்போது தினசரி ஏற்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.400 முதல் ரூ.700 வரை கூடுதலாக செலவாகிறது. தினமும் இதுபோன்ற விலை உயர்வை விவசாயிகளால் தாங்க இயலாது.
இந்த விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் அனைவரும் சம்ரலாவில் அவரவர் டிராக்டர்களுடன் ஒன்று கூடி பேரணி நடத்தியுள்ளோம். இந்த டிராக்டர்களின் சாவியை அரசு நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளோம். மேலும் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர கோரிக்கை வைத்துள்ளோம்.
நாடு முழுவதும் நடைபெறும் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு மத்திய அரசுதான் முழுக் காரணம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.