புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் மதிப்புதான் வீழ்ந்து வருவதாக, பிரதமர் மோடியைக் கிண்டல் செய்த காங்கிரசைச் சேர்ந்த நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு பாஜக பதில் அளித்துள்ளது.
நாட்டின் முதல் துணைப் பிரதமரும், இந்திய தேசத்தை ஒருங்கிணைத்தவருமான சர்தார் வல்லபபாய் படேலின் 182 மீட்டர் உயர பிரமாண்டமான சிலையை பிரதமர் நரேந்திர மோடி புதனன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
குஜராத் மாநிலம் கெவாடியா மாவட்டத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையில் உலகின் மிகப் பெரிய சிலையாக சர்தார் வல்லபபாய் படேல் சிலை திறந்து வைக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட (93 மீட்டர்) இரு மடங்கு உயரமாக சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பொறுப்பாளரும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா, தனது ட்விட்டர் பக்கத்தில் பிரமாண்ட சிலையின் காலடியில் பிரதமர் மோடி நிற்கும் படத்தை வெளியிட்டிருந்தார். அத்துடன் 'பறவை எதுவும் கீழே போட்டு விட்டதா ?' என்று கிண்டலும் செய்திருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மதிப்புதான் வீழ்ந்து வருவதாக, பிரதமர் மோடியைக் கிண்டல் செய்த நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு பாஜக பதில் அளித்துள்ளது.
இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட தகவலானது:
உம்..இல்லை. காங்கிரஸ் கட்சியின் மதிப்புதான் கீழே வீழ்ந்து வருகிறது. வரலாற்றின் மீதான ஏளனமும், பிரதமர் மோடியின் மீதான வெறுப்பு என்னும் நோய்தான் இத்தகைய வார்தைகளை பயன்படுத்த தூண்டுகிறது. இதுதான் ராகுல் காந்தியின் 'அன்பு' அரசியல்.
இவ்வாறு பாஜக விமர்சனம் செய்துள்ளது.