ஹோட்டலில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கு: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்பி மகனுக்கு ஜாமீன் 

ஹோட்டலில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கு: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்பி மகனுக்கு ஜாமீன் 

தில்லி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில், பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்பி மகனுக்கு நீதிமன்றம் ஜாமீன்  வழங்கியுள்ளது.
Published on

புது தில்லி: தில்லி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில், பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்பி மகனுக்கு நீதிமன்றம் ஜாமீன்  வழங்கியுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஆஷிஷ் பாண்டே, தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவருக்கு ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. 

அப்போது, ஆஷிஷ் பாண்டேவின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, 14 நாள் நீதிமன்றக் காவலில் ஆஷிஷ் பாண்டேவை வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதைத்தொடர்ந்து ஆஷிஷ் பாண்டே மீண்டும் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சிறப்பு நீதிபதி சுனி ராணா அக்டோபர் 23-ஆம் தேதியன்று தள்ளுபடி செய்தார்.  

இந்நிலையில் ஆஷிஷ் பாண்டேவுக்கு தில்லி மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம் வெள்ளியன்று ஜாமீன்  வழங்கியுள்ளது.    

ஆஷிஷ் பாண்டே தரப்பில் தாக்கல் செய்ப்பட்ட ஜாமீன் மனுவில் ஊடக விசாரணை அழுத்தம் காரணமாகவே, தற்போதைய முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது. 

அதே சமயம் அரசுத் தரப்பில் ஆஷிஷ் பாண்டே விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து ஆஷிஷ் பாண்டேவுக்கு ரூ.50000 சொந்த ஜாமீனிலும், அதே அளவு தொகைக்கு உத்தரவாதப் பத்திரம்  வழங்குமாறும் உத்தரவிட்டு, நீதிபதி தர்மேந்தர் சிங் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com