

சபரிமலை ஐயப்பன் கோயில்நடை வரும் 5-ஆம் தேதி திறக்கப்படவுள்ளதையொட்டி, சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை சுமார் 1,200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், விபரீதங்களைத் தடுக்கும் வகையில் எலவங்கல், பம்பை, நிலக்கல் மற்றும் சன்னிதானம் வரையில் மாவட்ட நிர்வாகம் இன்று இரவு முதல் நவம்பர் 6ம் தேதி வரை 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதே போல, பம்பை, நிலக்கல், சன்னிதானம் உள்ளிட்டப் பகுதிகள் சிறப்புப் பாதுகாப்புப் பகுதிகளாக அறிவித்திருக்கும் கேரள காவல்துறை, அவற்றை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களும் ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நவம்பர் 5ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதும், பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய வரும் போது, அவர்களைத் தடுக்கும் வகையில் யாரும் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பின்னணி:
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை செயல்படுத்த கேரள அரசு முயன்று வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு ஹிந்து அமைப்பினரும் ஐயப்ப பக்தர்களும் எதிர்க்கட்சியினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் ஐயப்பன் கோயில் நடை 6 நாள்கள் திறந்திருந்தபோது, போலீஸ் பாதுகாப்புடன் சில பெண்கள் கோயிலுக்கு செல்ல முயன்றனர். எனினும், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த சூழலில், சித்திரை ஆட்ட விஷேசம் விழாவுக்காக, ஐயப்பன் கோயில் நடை வரும் 5-ஆம் தேதி மாலை திறக்கப்படவுள்ளது. பின்னர், 6-ஆம் தேதி மாலையில் நடை சாத்தப்படும். இந்நிலையில், சபரிமலை தீர்ப்புக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களைக் கருத்தில் கொண்டு, அங்கு நவ.3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை 1,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பத்தனம்திட்டா காவல்துறை கண்காணிப்பாளர் டி.நாராயணன் கூறியதாவது:
சபரிமலை, பம்பை, நிலக்கல், வடசேரிக்கரை ஆகிய பகுதிகளில், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் அனில் காந்த் தலைமையில் 2 தலைமை ஆய்வாளர்கள், 5 கண்காணிப்பாளர்கள், 10 துணை கண்காணிப்பாளர்கள் கொண்ட போலீஸ் படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மாநில காவல்துறை தலைமை இயக்குநரின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, சபரிமலையும் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பம்பைக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும். நிலக்கல்லில் இருந்து நவம்பர் 5-ஆம் தேதி மதியத்துக்கு பின்னர்தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பம்பை மற்றும் சந்நிதானத்துக்கு செல்ல பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் டி.நாராயணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.