

தெலங்கானா தனி மாநிலம் அமைந்ததில் சந்திரசேகர ராவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எந்தப் பங்கும் கிடையாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், அவரது மகன் கே.டி.ராமா ராவ் மற்றும் அவர்களது குடும்பம் என யாருக்கும் தெலங்கானா இயக்கத்துடன் தொடர்பு கிடையாது. இது அப்பகுதி மக்களின் முன்னேற்றத்துக்காக முழுவதும் காங்கிரஸ் மூத்த தலைர்களால் முன்னெடுக்கப்பட்டது.
முன்பு ஒன்றாக இருந்த ஆந்திர மாநிலத்தில் அப்போதைய முதல்வர் சந்திரசேகர ராவுக்கு அமைச்சரவைப் பதவியை வழங்காத காரணத்தால் தான் அவர் இந்த தனித் தெலங்கானா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் இதுதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போதும் சந்திரசேகர ராவ் அதில் பங்கேற்கவில்லை.
தனித் தெலங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அதற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக எந்த கேள்வியையும் அவர் நாடாளுமன்றத்தில் எழுப்பவில்லை. மேலும் இதை புறக்கணிக்கவே அவர் அதில் பங்கேற்கவும் இல்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இப்பகுதியில் வாக்கு வங்கி அரசியலைப் பற்றி கவலைப்படாமல் இந்த சட்டத்தை அப்போதைய காங்கிரஸ் அரசு தான் இதை ஏற்படுத்தியது. இதற்கு பிரதமராக இருந்த மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியாவும் தான் முழு முயற்சி எடுத்தனர்.
இதில் இரு சக்கரங்களைக் கொண்ட ரதமாகத் தான் காங்கிரஸ் அரசு ஏற்படுத்தியது. அவற்றில் ஆந்திராவுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்தும், தெலங்கானாவுக்கு மிகப்பெரிய நிறுவனங்கள் தொடங்குவதற்கான திட்டமும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதை தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு முற்றிலும் புறக்கணித்துள்ளது.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் ஆகிய இருவரும் மக்களை ஏமாற்றிவிட்டனர். வருகிற டிசம்பர் 12-ஆம் தேதி தெலங்கானாவில் காங்கிரஸ் அரசு அமையும், அப்போது சந்திரசேகர ராவ் தனது பண்னை வீட்டுக்குச் சென்று ஓய்வு எடுக்கலாம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.