கெளஹாத்தி: 'நாகாலாந்தின் காந்தி' என்று புகழப்படும் காந்தியவாதியான நட்வர் தக்கர் இல்லாமலேயே இம்முறை அங்கு காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் தஹானு பகுதியில் பிறந்தவரான நட்வர் தக்கர் காந்தியக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடுள்ளவர். அவற்றைப் பரப்புவதையே தனது வாழ்நாள் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். 1955-ஆம் ஆண்டு தனது வேலை நிமித்தம் நாகாலாந்தின் சுச்சுயும்லங் பகுதிக்கு வந்தவர், தொடர்ந்து அப்பிராந்திய மக்களின் மேம்பாட்டிற்காக தன்னை அர்பணித்துக் கொண்டு செயல்பட்டு வந்தார்.
நாகா பிரிவினைவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்த அந்த காலகட்டத்தில் தொடர்ந்த அவரது காந்திய நோக்கிலான செயல்பாடுகளின் மூலம் மக்களின் நற்பெயரைப் பெற்றார் அத்துடன் அவருக்கு 'நாகாலாந்தின் காந்தி' என்ற அடைமொழி அவருக்கு வழங்கப்பட்டது. அத்துடன் அவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
தற்போது 86 வயதாகும் அவர் செப்டம்பர் 9-ஆம் தேதியன்று உடல்நலக்குறைவால் திமாபுர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 19-ஆம் தேதியன்று அஸ்ஸாமின் தலைநகரான கெளஹாத்தியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
நாகாலாந்துக்கு அவர் வருகை தந்த பிறகு அவர் இல்லாமல் அங்கு காந்தி ஜெயநதி கொண்டப்பட்டதே கிடையாது. தற்போது உடல்நலக்குறைவால் அவர் அவதிப்பட்டு வருவதால் இம்முறை அவர் இல்லாமலேயே அங்கு காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டுள்ளது.
அதேசமயம் நட்வர் தக்கரின் உடல்நலம் குறிப்பிடத்தக்க அளவு தேறி வருவதாக அவரது மகனான அச்சுபா தெரிவித்துள்ளார்.