அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வர இருக்கும் நிலையில், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று மாயாவதி அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் வலுவான பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகளும், பிராந்தியக் கட்சிகளும் திட்டமிட்டு வருகின்றன. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் இந்தக் கூட்டணியில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் அஜித் ஜோகியுடன் கூட்டணி வைக்கப்போவதாக மாயாவதி அறிவித்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாதி உள்ளிட்ட பிராந்தியக் கட்சிகள் கூட்டணி வைப்பதாக அறிவித்தனர். ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்று மாயாவதி அறிவித்தார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் மாயாவதி புதன்கிழமை அறிவித்தார். அப்படியே கூட்டணி வைத்தாலும் பிராந்தியக் கட்சிகளுடன் தான் கூட்டணி என்று அவர் தெரிவித்தார்.
இது காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.