

முசாஃபர்பூர் சிறுமிகள் காப்பக பாலியல் வழக்கில் முக்கியக் குற்றவாளி பிரஜேஷ் தாகூர் ஓட்டுநர் கொடுத்த தகவலின்படி சிக்கந்தர்பூர் மயானத்தில் சிபிஐ அதிகாரிகள் எலும்புக் கூடுகளை தோண்டி எடுத்துள்ளனர்.
பிகார் மாநிலம், முசாஃபர்பூர் சிறுமிகள் காப்பக வழக்கில் 7 முதல் 17 வயதுக்குட்பட்ட 44 சிறுமிகளில் 34 சிறுமிகள் பல முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து, முசாஃபர்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது, அந்த காப்பகத்தில் இருந்த சிறுமிகள் சிலர், இங்கு இருந்த ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, புதைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கு எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, காப்பகத்தின் உரிமையாளர் பிரஜேஷ் தாகூருக்கு நெருக்கமான 2 பேர் மற்றும் சமூக நலத்துறை இணை இயக்குநர் ரோஸி ராணி உள்ளிட்டவர்களை சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில், காப்பக உரிமையாளர் பிரஜேஷ் தாகூரின் ஓட்டுநர் விஜய் தேவாரி தெரிவித்த தகவலின் அடிப்படையில், சிக்கந்தர்பூர் மயானத்தில் இருந்து மனித எலும்புக் கூடுகளை சிபிஐ அதிகாரிகள் தோண்டி எடுத்துள்ளனர்.
விஜய் தேவாரியை உடன் அழைத்துச் சென்று, அவர் காண்பித்த இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இந்த மனித எலும்புக் கூடுகளை தோண்டி எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. அங்கிருந்து கைப்பற்றப்பட்ட எலும்புக் கூடுகள், காப்பகத்தில் இருந்து காணாமல் போன 5 சிறுமிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவை தற்போது டிஎன்ஏ பரிசோதனைக்குப் பிறகு தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்படவுள்ளது.
வழக்கு விவரம்:
பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) ஒன்று காப்பகத்தை நடத்தி வந்தது. அங்கிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியானது. இதையடுத்து, இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக காப்பகத்தை நடத்தி வந்த பிரஜேஷ் தாகூர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.