

பம்பை: ஆண் பக்தர்களின் துணையோடு மேலும் சில பெண் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு வரவிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சபரிமலை ஐயப்பனை தரிசிக்க 50 ஆண் பக்தர்களுடன் 13 பெண்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு வந்து கொண்டிருப்பதாக கேரள காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவல் உறுதி செய்யப்படாவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில் வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, துலாம் மாதத்துக்கான பூஜைகள் முடிந்து கோயில் நடை மூடப்பட்டது. சபரிமலை, இளவன்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த மாநில அரசு முடிவெடுத்ததைத் தொடர்ந்து, சபரிமலையிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து உச்ச நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்ததையடுத்து, ஹிந்து அமைப்புகளும், காங்கிரஸ், பாஜக ஆகிய எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரளம் மட்டுமன்றி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழலில், சபரிமலை கோயிலின் நடை கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டது. அப்போது முதலே பம்பை, நிலக்கல், எருமேலி என பாதை நெடுகிலும் பக்தர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, சபரிமலை கோயிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்ட 2 பெண்கள், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.