

அதானி குழுமத்துக்கு கரிசனம் காட்டும் போக்கில் மத்திய அரசு செயல்படுவதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
அதானி குழுமத்துக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) கைவிட்டுவிட்டது என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் 3 வழக்குகளை குறிப்பிட்டு குற்றம்சாட்டினார்.
முதல் வழக்கு:
முதல் வழக்கு, ரூ.6,600 கோடி மதிப்புள்ள மின்சாரம் தொடர்பான உபகரணங்கள் இறக்குமதி செய்தது தொடர்புடையது. ஆனால், இந்த வழக்கு கைவிடப்பட்டது என்று குற்றம்சாட்டினார்.
2-ஆவது வழக்கு:
இந்த வழக்கு குஜராத் அரசால் வாங்கப்படும் மின்சாரம் தொடர்புடையது. ஏப்ரல் 2017 உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி குஜராத் மற்றும் மற்ற மாநில அரசுகள் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.2.4 ரூபாய்க்கு பெறவேண்டும். 2007-இல் இந்த விலை நிர்ணயம் தான் ஒத்துக்கொள்ளப்பட்டது. இதில், நிறுவனங்கள் எந்தவித லாபமும் பெறக் கூடாது.
ரமேஷ் கூறுகையில், அடுத்த 30 ஆண்டுகளுக்கு எஸ்ஸார், டாடா மற்றும் அதானி நிறுவனங்கள் 1.3 லட்சம் கோடி ரூபாய் அணுகூலம் பெறவுள்ளனர். அதாவது, ஆண்டுக்கு ரூ.4500 கோடி ரூபாய் ஆதாயம் பெறவுள்ளனர். குஜராத் அரசின் இந்த முடிவு வங்கிகள் மீது கூடுதல் சுமையாக 18,000 கோடி ரூபாயை ஏற்றவுள்ளது என்ற குற்றச்சாட்டை வைத்தார்.
3-ஆவது வழக்கு:
நிலக்கரி இறக்குமதியில் ரூ.29,000 கோடி ஊழலை டிஆர்ஐ கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் 80 சதவீதம் அதானி குழுமத்தால் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்குமாறு ஆர்வலர் பிரஷாந்த் பூஷண் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிங்கப்பூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் உள்ளது. ஆனால், அந்த ஆவணங்களை இந்திய அரசு பெறக்கூடாது என்று அதானி குழுமத்தினர் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அதானி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சிங்கப்பூர் நீதிமன்றம் ஒன்றரை மாதத்துக்கு முன் நிராகரித்தது.
இருப்பினும், அதானி குழுமம் இதுதொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 19-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் அதானி குழுமம் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராவார்கள். அதனால், இந்த வழக்கில் மோடி அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். ஊழல் நடைபெற்றுள்ளதாக டிஆர்ஐ நம்புகிறது. அதனால், இதுதொடர்பான கடிதங்கள் தேவை, அதற்கான தடையை நீதிமன்றம் விதிக்கக் கூடாது என்று அவர் (சிறப்பு வழக்கறிஞர்) வாதாட வேண்டும்.
வரும் 19-ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கும் இந்த வழக்கில் சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று டிஆர்ஐ நிதியமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது. ஆனால், இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.