நாட்டின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தை மணிப்பூரில் அமைப்பதற்கு இயற்றப்பட்ட அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
"தேசிய விளையாட்டு பல்கலைக்கழக அவசரச் சட்டம்' மக்களவையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தச் சட்டத்துக்கு கடந்த 23-ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த அவசரச் சட்டத்தை அமல்படுத்த அவர் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
நாட்டின் முதல் விளையாட்டு பல்கலைக்கழம் மணிப்பூர் மாநிலம், இம்பாலில் அமையவுள்ளது.
இதற்காக 325.90 ஏக்கர் நிலப் பகுதியை மணிப்பூர் அரசு ஒதுக்கியுள்ளது. விளையாட்டு அறிவியல், விளையாட்டு தொழில்நுட்பம், விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு பயிற்றுநர் ஆகிய படிப்புகள் இந்தப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும்.
அத்துடன், அனைத்து வசதிகளுடன் கூடிய சர்வதேச தரத்திலான பயிற்சி மையமும் இந்தப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படவுள்ளது.