/

அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

ஒரு மாநில அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

News image

சென்னை உயர் நீதிமன்றம்

கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 12:43 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: மாநில அமைச்சரவை அளிக்கும் பரிந்துரைகளை, அந்த மாநில ஆளுநர், தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஒரு மாநிலத்தின் அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், ஆளுநர் என்பவர், தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை, அவர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

சிறையில் நீண்ட காலம் உள்ள கைதிகளை, முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு அளிக்கும் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பது தொடா்பான வழக்கை விசாரித்து வந்த சென்னை உயா்நீதிமன்ற முழு அமா்வு இன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அளித்துள்ளது.

தமிழ்நாட்டையே உலுக்கிய அண்ணாமலை பல்கலை. மாணவா் நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனுவை ஆளுநா் நிராகரித்தாா். இதை எதிா்த்து ஜான் டேவிட்டின் தாயாா் எஸ்தா் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமா்வு, முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநா் நிராகரித்தது தவறு. அதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. எனவே ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்யும் பரிந்துரையை ஆளுநா் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து ஆளுநா் அந்த பரிந்துரையை மீண்டும் நிராகரித்தாா். இதை எதிா்த்து ஜான் டேவிட்டின் தாயாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதேபோன்று முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு செய்த பரிந்துரையை ஆளுநா் நிராகரித்த உத்தரவை எதிா்த்து மேலும் பலா் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமிநாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வு மாறுபட்ட தீா்ப்பை அளித்திருந்தனர்.

மேலும், இந்த வழக்குகளை 3 நீதிபதிகள் கொண்ட முழு அமா்வுக்கு பரிந்துரைத்த நீதிபதிகள், அப்போது ஜான் டேவிட் உள்ளிட்டோரை இடைக்கால பிணையில் விடுவித்தனா். இந்தநிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, ஜி.கே.இளந்திரையன் மற்றும் சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய முழு அமா்வு முன் விசாரணை நடைபெற்று வந்தது.

அப்போது, ஆளுநர் என்பவர், அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் பரிந்துரையின்படியே செயல்படமுடியும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்திருக்கிறது என்று மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் வாதிட்டிருந்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இன்று பிறப்பித்த தீர்ப்பில், கைதிகளின் தண்டனை குறைப்பு மற்றும் முன் கூட்டியே விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவை தன்னிச்சையாக நிராகரிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர் என்று தீர்ப்பளித்துள்ளனர்.

Summary

The Madras High Court has ruled that the Governor cannot arbitrarily reject the recommendations of a state cabinet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.