ரஃபேல் விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும்: உச்சநீதிமன்றம்

ரஃபேல் தொடர்பான புதிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை கூடாது என்கிற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்,
ரஃபேல் விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும்: உச்சநீதிமன்றம்
Published on
Updated on
2 min read


புதுதில்லி: ரஃபேல் தொடர்பான புதிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை கூடாது என்கிற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வித ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெறும் என அதிரடியாக தெரிவித்துள்ளது. 

பிரான்ஸுடன் இந்தியா மேற்கொண்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை எதிர்த்து பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தாங்கள் விசாரணை நடத்துவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பளித்திருந்தது.

இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கெளல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த மாதம் 14-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால், பிரான்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட ரஃபேல் ஒப்பந்த ஆவணங்களைக் கையாளும் உரிமை மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. இந்திய ஆதாரங்கள் சட்டத்தின் 123-ஆவது பிரிவின்படி, அதனைத் தகுந்த அமைச்சகத்தின் அனுமதியின்றி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. தகவல் அறியும் உரிமைச் சட்டமும் இதனை உறுதிசெய்கிறது. நாட்டின் பாதுகாப்புக்குப் பாதிப்பு அளிக்கும் வகையிலான ஆவணங்களை ஆதாரங்களாக யாரும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. அனைத்தையும் விட நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்று வாதாடினார்.

இதையடுத்து, மனுதாரர்களில் ஒருவரான வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், அரசு தலைமை வழக்குரைஞர் குறிப்பிடும் ஆவணங்கள் அனைத்தும் ஏற்கெனவே பொதுவெளியில் வெளியிடப்பட்டுவிட்டன. புலனாய்வு அமைப்புகளின் ஆவணங்களைத் தவிர மற்ற ஆவணங்கள் எவையும் தனித்தன்மை வாய்ந்தவை இல்லை என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டமும் உறுதி செய்துள்ளது என்று வாதத்தை முன்வைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில், மத்திய அரசின் ஆட்சேபம் மீது முதலில் முடிவு எடுக்கப்பட்டபிறகு, மறுஆய்வு மனுக்கள் கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்த தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. 

3 நீதிபதிகள் ஒருமனதாக வழங்கிய தீர்ப்பில், ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், சட்ட விரோதமாக பெறப்பட்ட ஆவணங்கள் மீது ஆய்வு கூடாது எனக் கூறிய மத்திய அரசின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்தது. 

மேலும், அனைத்து வித ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெறும். பத்திரிகைகளில் வெளியான ரஃபேல் ஆவணங்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ரஃபேல் தொடர்பான பாதுகாப்புத்துறையின் ஆவணங்கள் விசாரணைக்கு உகந்தவை தான் என தெரிவித்துள்ளது. 

புதிய ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ள உச்சநீதிமன்றம், ரஃபேல் வழக்கு தொடர்பான புதிய ஆவணங்களை தாக்கல் செய்யலாம் என தெரிவித்துள்ளது. மறுஆய்வு மனு விதான விசாரணை தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்தியது குறித்து விசாரணையில் விளக்குவோம் என்றும் 3 நீதிபதிகள் ஒருமனதாக வழங்கிய தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என அருண் ஷோரி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com