புது தில்லி: ஒடிஸாவில் பிரதமர் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரை சோதனை செய்த குற்றத்துக்காக தேர்தல் பார்வையாளர் பணியில் இருந்த உயர் அதிகாரியை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
சிறப்பு அதிரடிப் படையின் பாதுகாப்பில் இருக்கும் இடத்தில், அதிகாரத்தை மீறி சோதனை நடத்த உத்தரவிட்டக் குற்றத்துக்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி மொகம்மது மொஹ்சின், சிறப்பு அதிரடிப் படையின் பாதுகாப்பில் இருக்கும் இடத்தில் சோதனை நடத்த அளிக்கப்பட்டிருக்கும் விலக்கை மீறி, ஏப்ரல் 16ம் தேதி ஒடிஸா மாநிலம் சம்பல்புர் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனை நடத்த உத்தரவிட்டக் குற்றத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறைக்கு மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை காரணமாக பிரதமர் மோடியின் பயணம் சுமார் 15 நிமிடங்கள் காலதாமதமானதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.