மும்பை: மும்பையில் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது ஆதரவு யாருக்கு என்பதை மும்பை டப்பாவாலாக்கள் வெள்ளியன்று தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான மும்பையில் லட்சக்கணக்கானோர் நகரின் பல்வேறு பகுதியிலும், பல்வேறு அலுவலகங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு பணிபுரிவோருக்கு அவர்களின் வீடுகளில் இருந்து மதிய உணவை எடுத்துச் செல்லும் வேலையை 'டப்பா வாலாக்கள்' என்று அழைக்கப்படும் உணவு கொண்டு செல்வோர் மேற்கொண்டு வருகின்றனர். ஒருநாளைக்கு சுமார் 2 லட்சம் பேருக்கான உணவை நகரின் குறுக்கு நெடுக்காக கொண்டு செல்லும் சுமார் 5000 பேரின் உழைப்பானது சர்வதேச அளவில் புகழ்பெற்றதாகும்.
இந்நிலையில் மும்பையில் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது ஆதரவு யாருக்கு என்பதை மும்பை டப்பாவாலாக்கள் வெள்ளியன்று தெரிவித்துள்ளனர்.
மும்பையில் உள்ள ஆறு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலானது வரும் 29-ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இதில் தங்களது ஆதரவு யாருக்கு என்பது குறித்து ‘மும்பை டப்பா வாலாக்கள் சங்கத்தின்' தலைவரான சுபாஷ் தலேக்கர் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எப்போதும் எங்களது நலனில் அக்கறை செலுத்தி வரும் சிவசேனாவுக்குகான் இம்முறை எங்களது ஆதரவு. அக்கட்சியானது எங்களுக்காக 'டப்பாவாலா பவன்' ஒன்றையும் கட்டுவதாக உறுதியளித்துள்ளது. அத்துடன் சிவசேனா மட்டுமே தங்களது 'விஷன் மும்பை' திட்டத்தில் டப்பாவாலாக்களையும் இணைத்துள்ளது. அத்துடன் எங்களது மேம்பாட்டிற்காக பல்வேறு முன்னெடுப்புகளையும் செய்துவருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.