
சூரத்: இளம்பெண்னை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
தன்னைத்தானே கடவுள் என்று அறிவித்துக் கொண்டவரான சாமியார் ஆசாராம் பாலியல் வழக்குக்களில் சிக்கி சர்ச்சைக்குள்ளானவர்.
தற்சமயம் ஆசிரமத்தில் இருந்த இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் குற்றவாளி என்று நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு அளித்துள்ளது.
சூரத்தில் அமைந்துள்ள சாமியாரின் ஆசிரமத்தில் அந்த இளம்பெண் 2002-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை சிஷ்யையாக தங்கி இருந்தார். அப்போது சாமியாரின் மகனான நாராயண் சாய் தனக்குத் தொடந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பெண் 2013-ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் கொடுத்தார்.
அதைத் தொடந்து விசாரணையின் முடிவில் ஹரியாணாவின் பிப்லியிலிருந்து நாராயண் சாய் கைது செய்ப்பட்டார்.
போலீசார் தொடந்த வழக்கானது சூரத்தில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கில்தான் நீதிமன்றம் வெள்ளியன்று நாராயண் சாய் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்துள்ளது. அவருக்கான தண்டனை விபரங்கள் ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியிடப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜஸ்தானில் உள்ள தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சாமியார் ஆசாரம் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
முன்னரே அறிவித்திருந்தபடி நாராயணன் சாய்க்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பாக செவ்வாயன்று நீதிமன்றத்தில் வாதம் நடைபெற்றது. வாதங்களின் முடிவில் நாராயணன் சாய்க்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.