காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் மாநிலங்களவைத் தேர்தலுக்காக ஆகஸ்ட் 13-ஆம் தேதி மனு தாக்கல் செய்யவுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக உறுப்பினரின் மறைவையடுத்து அங்கு காலியான ஒரு மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மன்மோகன் சிங் அங்கு போட்டியிட உள்ளார். மேலும் அங்கு காங்கிரஸ் கட்சிக்கு போதிய பெரும்பான்மை உள்ளதால் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு தேர்வாகவுள்ளது உறுதியானது.
கடந்த 30 ஆண்டுகளாக அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு வந்த மன்மோகன் சிங் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்தது. ஆனால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்ததால் மன்மோகன் மீண்டும் போட்டியிட முடியாமல் போனது.
1991-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 5 முறை மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிலும் 2004-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இருமுறை நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளார். மாநிலங்களவையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நாட்டின் முதல் பிரதமர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.