மேட்டூர்: கர்நாடகாவில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக ஞாயிறு மாலை நிலவரப்படி தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 3 லட்சம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கேரள, கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. குறிப்பாக கர்நாடகத்தில் உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. எனவே அந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இவற்றில் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியுள்ளதால் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஞாயிறு பிற்பகல் நிலவரப்படி கர்நாடக அணைகளில் இருந்து 3 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏறபட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கும் அதிகமாக உள்ளது. மேட்டூர் அணை ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது.
சனிக்கிழமை காலை அணையில் நீர் இருப்பு 22 டிஎம்சி.யாக இருந்தது. இன்று 30.59 டிஎம்சி.,யாக அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.