மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காஷ்மீர் விவகாரத்தில் மனசாட்சிக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும்: அதிரவைத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் ராஜிநாமா 

காஷ்மீர் விவகாரத்தில் எனது மனசாட்சிக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும் என்று கூறி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜிநாமா செய்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

News image
Updated On :25 ஆகஸ்ட் 2019, 12:00 pm

DIN

திருவனந்தபுரம்: காஷ்மீர் விவகாரத்தில் எனது மனசாட்சிக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும் என்று கூறி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜிநாமா செய்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலியில் முக்கிய அரசுத் துறைகளின்செயலாளர் பதவியில் இருப்பவர் கண்ணன் கோபிநாதன். என்ஜினியரிங் பட்டதாரியான இவர் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர்.

இவர் சமீபத்தில் தனது பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். அதற்கான காரணம் குறித்து அவர் கூறியிருப்பதுதான் பலரது கவனத்திற்கு உள்ளாகியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக லட்சக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இது குறித்து நாட்டின் பெருவாரியான மக்கள் கவலை கொள்ளவில்லை. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த முடிவை வரவேற்கவும், எதிர்ப்பு தெரிவிக்கவும் அங்கு வாழும்  மக்களுக்கு உரிமை உண்டு

மக்களின் குரலாக இருப்பதற்காக தான் நாங்கள் பதவிக்கு வருகிறோம். ஆனால் இங்கு எங்கள் குரலே எங்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. நான் ஒருவன் பதவி விலகுவதால் காஷ்மீர் மக்களின் வாழ்வில் எந்த ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை. ஏதோ ஒரு வகையில் இந்த அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நான் விரும்பவில்லை. எனது மனசாட்சிக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தனது ராஜிநாமா கடிதத்தை மேலிடத்திற்கு அனுப்பியிருப்பதாகவும், அவர்களின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவதற்கு முன்பு இவர் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, சேரியில் வாழும் குழந்தைகளுக்கு இலவசமாக வகுப்புகள் எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, தனது அடையாளங்கள் எதையும் வெளிப்படுத்தாமல் நிவாரண பணிகளில் ஈடுபட்டு மக்களின் கவனத்தை இவர் கவர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.