

புது தில்லி: ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை மீண்டும் 5 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை மாலையிலிருந்து, அவரை கைது செய்வதற்கான முயற்சிகளில் சிபிஐ-யும், அமலாக்கத் துறையும் ஈடுபட்டிருந்தன. எனினும், ப.சிதம்பரம் எங்கிருக்கிறார்? என்ற கேள்வி நிலவி வந்த சூழலில், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை இரவில் அவர் செய்தியாளர்களை திடீரென சந்தித்தார்.
பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, தில்லியின் ஜோர்பாக் பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு வந்தார். அங்கு அவரை சிபிஐ அதிகாரிகள் பலத்த போராட்டத்திற்கு பிறகு கைது செய்தது. ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் வியாழன் அதிகாலையில் விசாரணை மேற்கொண்டதாக கூறப்பட்டது. பின்னர் வியாழன் மாலை 4 மணிக்கு தில்லி ரோஸ் அவென்யூ வளாகத்திலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதியிடம் சிபிஐ தரப்பில் சிதம்பரத்தை ஐந்துநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. நீதிபதியும் அவ்வாறே உத்தரவிட்டார். அத்துடன் 26-ஆம் தேதி திங்களன்று சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை மீண்டும் 5 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திங்களன்று சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்ட போது இன்னும் அவரிடம் விளக்கங்கள் பெற வேண்டியிருப்பதால், அவரது காவலை மேலும் 5 நாட்கள் நீட்டிக்க சிபிஐ தரப்பு அனுமதி கோரியது.
அதனை ஏற்று சிதம்பரத்தை மீண்டும் 5 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இது சிதம்பரத்திற்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.