ஜம்மு: ஜம்முவின் புலவாமா மாவட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்புக் குறைபாடு காரணம் இல்லை என்று அம்மாநில ஆளுநரின் ஆலோசகரும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரியுமான விஜய்குமார் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபுரா பகுதியில் சி.ஆர்.பி.எப் படை வீரர்களின் அணி ஒன்று வியாழன் அன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.
அப்போது அவர்களின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் 'திடீர்' வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள்.
எதிர்பாராத இந்த தாக்குதலில் இதுவரை 40 வீரர்கள் மரணமடைந்துள்ளனர். பலத்த காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முஹம்மது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்புக் குறைபாடு காரணம் இல்லை என்று அம்மாநில ஆளுநரின் ஆலோசகரும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரியுமான விஜய்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் வியாழன் இரவு கூறியதாவது:
இந்த தாக்குதலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைக் கொண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏதும் காரணம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.