புது தில்லி: ரஃபேல் விவகாரத்தில் உண்மையை மறைக்கவே நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் அமளியில் ஈடுபடுகிறது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவையில் வெள்ளியன்று நடைபெற்ற ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் உண்மைகளைக் கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. ராணுவத்திற்கு தேவையான உபகரணங்களை சரியான நேரத்தில் வாங்குவதற்கே பாஜக முன்னுரிமை கொடுக்கும்.
காங்கிரஸ் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டு, குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும், இந்த விவகாரத்தில் உண்மைகளை மறைப்பதற்காகவே காங்கிரஸ் தற்போது அவையில் அமளியில் ஈடுபடுகிறது. காங்கிரஸுக்கு விமானத்தை வாங்க விருப்பம் கிடையாது, எனவேதான் அவர்கள் எதுவும் செய்யவில்லை.
வரும் செப்டம்பர் மாதத்தில் முதல் ரபேல் விமானம் இந்தியாவுக்கு கிடைக்கும். 36 விமானங்களில் கடைசி விமானம் 2022-ம் ஆண்டு வழங்கப்படும். இதுதொடர்பான எல்லா விவகாரங்களிலும் வெளிப்படைத்தன்மை இருக்கிறது.
பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பில் ஒப்பந்தம் என்பதற்கு இடையே பெரிய வேறுபாடு உள்ளது. தேசிய பாதுகாப்புக்கே எப்போதும் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.