உத்தரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதி பொதுச் செயலாளராக பிரியங்காவை நியமித்ததன் மூலம், கட்சித் தலைவர் ராகுல் காந்தி தோல்வியடைந்து விட்டார் என்பதை காங்கிரஸ் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு விட்டதாக பாஜக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக தில்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மகா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் தலைவர்களால் ராகுல் காந்தி நிராகரிக்கப்பட்டு விட்டார். இதனால், தேர்தலில் தமது குடும்பத்தினருடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலைக்கு ராகுல் காந்தி தள்ளப்பட்டுள்ளார்.
பிரியங்காவை நியமித்ததன் மூலம், ராகுல் காந்தி தோல்வியடைந்து விட்டார் என்பதை காங்கிரஸ் வெளிப்படையாக அறிவித்துள்ளது. மேலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவரையே கட்சியை காப்பாற்ற நியமித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தோருக்கு கீரிடம் சூட்டுவது இயற்கையானதுதான்.
இதைத்தான் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தேர்தலில் மக்களுக்காக சேவை செய்வோருக்கும், அரசியல் வாரிசுகளுக்கும் இடையே போட்டி நிலவும் எனத் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி ஜவாஹர்லால் நேருவிடம் இருந்து அவரது மகள் இந்திரா காந்திக்கும், பின்னர் இந்திரா காந்தியிடம் இருந்து அவரது மகன் ராஜீவ் காந்திக்கும் சென்றது. பின்னர் காங்கிரஸ் தலைவர்களாக சோனியா காந்தி, ராகுல் காந்தி பதவியேற்றனர். இதற்கடுத்து காங்கிரஸ் தலைவராக யார் பதவியேற்பார்கள் என்று புதிய இந்தியா கேள்வி கேட்கிறது.
காங்கிரஸ் கட்சியில் அனைத்து பதவிகளிலும், ஒரு குடும்பத்தைச் சேர்ந்தோரே நியமிக்கப்படுகின்றனர். இதுதான் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கும் அடிப்படை வித்தியாசம் ஆகும்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரையில், சோனியா குடும்பம்தான் கட்சியாகும். பாஜகவை பொறுத்தவரை, கட்சிதான் குடும்பம் ஆகும் என்றார் சம்பித் பத்ரா.
ராகுலின் வீழ்ச்சி-உ.பி. பாஜக விமர்சனம்: உத்தரப் பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளரும், மாநில அமைச்சருமான சித்தார்த் நாத் சிங் கூறியபோது, ராகுல் காந்தியின் வீழ்ச்சிதான் காங்கிரஸில் பிரியங்காவின் வளர்ச்சி என்றார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
புதிய பதவியில் நியமிக்கப்பட்டதற்கும், பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பதற்கும், பிரியங்காவுக்கு எனது வாழ்த்துகள். ராகுல் காந்தியை நம்பியிருந்த நிலை முடிவுக்கு வந்துவிட்டது என்பதை சோனியா குடும்பத்தினர் இதன்மூலம் ஒப்புக் கொண்டுள்ளனர். ரேபரேலி தொகுதியை கையாண்ட விதத்தை வைத்தே பிரியங்காவை மதிப்பிடலாம். அந்தத் தொகுதியில் எந்த வளர்ச்சியும் இல்லை.
இந்திய அரசியலில் சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்தோர் ஒவ்வொருவராக சோதனைக்கு உள்படுத்தப்படுவதும், பிறகு நிராகரிக்கப்படுவதும் நல்லதுதான். தற்போது அதில் பிரியங்காவின் பங்கு வந்துள்ளது என்றார் சித்தார்த் நாத் சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்று 12 மாவட்டங்களில் மழை! ஓரிரு இடங்களில் 2 -3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!

கட்சிகளை அநாகரீக பாதையில் அழைத்துச் செல்பவா்கள் மாறவேண்டும்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்

அதிமுகவில் அணிமாறிய 3 எம்எல்ஏக்கள்? எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு பின்னடைவு!

ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் இவர்களுடையதுதான்: சுரேஷ் ரெய்னா
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


