புது தில்லி: தாமரை இந்தியாவின் தேசிய மலரா என்பது தொடர்பாக மத்திய அமைச்சர் நித்யானந்தா ராய் மாநிலங்களவையில் விளக்கம் அளித்துள்ளார்.
புலி இந்தியாவின் தேசிய விலங்கு என்றும், மயில் நமது தேசிய பறவை மற்றும் இந்தியாவின் தேசிய மலர் தாமரை என்பதாக நாம் அறிந்திருக்கிறோம்.
இந்நிலையில் தாமரை இந்தியாவின் தேசிய மலரா என்பது தொடர்பாக மத்திய அமைச்சர் நித்யானந்தா ராய் மாநிலங்களவையில் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய் புதனன்று மாநிலங்களைவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:
மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் கடந்த 2011-ம் ஆண்டில் இந்தியாவின் தேசிய விலங்காக புலி, தேசிய பறவையாக மயில் ஆகியவற்றை அங்கீகரித்து இதற்கான தனி அறிவிக்கையும் வெளியிடப்பட்டது.
ஆனால் தேசிய மலர் விவகாரத்தில் அப்படி எந்தவொரு அறிவிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இவ்வாறு அவர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.