நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடர்வதால் கர்நாடக சட்டப்பேரவை ஒத்திவைப்பு 

குமாராசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றிய விவாதம் தொடர்வதால் கர்நாடக சட்டப்பேரவை திங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடர்வதால் கர்நாடக சட்டப்பேரவை ஒத்திவைப்பு 
Published on
Updated on
1 min read

பெங்களூரு: குமாராசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றிய விவாதம் தொடர்வதால் கர்நாடக சட்டப்பேரவை திங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் வியாழனன்று ஆளும் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் நேற்று முழுவதும் பாஜகவின் நடவடிக்கையை எதிர்த்து  காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. மாலை ஆறு மணிக்குள் நம்பிகை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டிருந்தும் நேற்று வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

இந்நிலையில் வெள்ளி மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் மீண்டும் உத்தரவிட்டிருந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தலைமையில் வெள்ளியன்று  காலை கூடியது. முதலில் முதல்வர் குமாரசாமி உரையாற்றினார். அதைத் தொடர்ந்து தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏக்கள் பேசினர். அதனால் மதியம் 01.30 மணி தாண்டியும் வாக்கெடுப்பு நடைபெறவில்லை.  

அதேசமயம் மாலை ஆறு மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கர்நாடக சபாநாயகருக்கு மாநில ஆளுநர் மீண்டும் உத்தரவு பிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து அவையில் நடந்த விவாதத்தின் போது பேசிய முதல்வர் குமாரசாமி, ‘மாலை ஆறு மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது என்பது சபாநாயகர் கையில் தான் உள்ளது. ஆளுநர் உத்தரவை நிறைவேற்றாததால் ஏற்படும் விளைவில் இருந்து என்னை சபாநாயகர்தான் காப்பற்ற வேண்டும். அத்துடன் கர்நாடகாவில் குதிரை பேரம் கடந்த ஒரு வாரமாகவே நடந்து வருகிறது என்று நான் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் ஆளுநருக்கு இப்போதுதான் இது தெரிகிறதா?' என்று குறிப்பிட்டார்.

அவரது இந்தப் பேச்சின் காரணமாக அவையில் சற்று நேரம் சலசலப்பு நிலவியாது. அதையடுத்து  எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து  தீர்மானத்தின் மீது பேசி வந்தனர்.

இந்நிலையில் இந்த விவாதம் இரவு 07.30 மணியைத் தாண்டியும் தொடர்வதால் கர்நாடக சட்டப்பேரவையை திங்கள்கிழமை வரை ஒத்திவைத்து, சபாநாயகர் ரமேஷ் குமார் ஒத்திவைத்தார்.

இதனால் வரும் திங்கள்கிழமை வரை குமாரசாமி அரசின் ஆயுள் நீட்டிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com