கர்நாடகத்தில் நிலையான ஆட்சியை பாஜக வழங்குவது கடினம் என காபந்து முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரு லக்சந்திராவில் வியாழக்கிழமை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ராமலிங்க ரெட்டியைச் சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மாநில அரசியல் குழப்பான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. எனவே, எல்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த ராமலிங்க ரெட்டியை நான் உள்பட காங்கிரஸ் தலைவர்கள், அதனை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினோம். எங்களின் வேண்டுகோளை ஏற்று தனது ராஜிநாமாவை அவர் திரும்பப் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதற்காக அவரை நேரில் சந்தித்தேன்.
நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தின் போதே அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அது சாத்தியமாகவில்லை. எனவேதான், நேரில் அவரை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டேன். மேலும், மாநிலத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலில், பாஜக நிலையான ஆட்சி வழங்குவது கடினம். மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியைப் பிடித்தாலும், முதலில் நிதி மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
கர்நாடகத்தில் இதுபோன்ற ஒரு சவாலான பணி உருவாகியுள்ளது வருத்தத்திற்குரியது. அரசியல் சாசனப்படி, தங்கள் பதவியை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள், சட்டப்பேரவைத் தலைவரின் விசாரணைக்கு நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பு நியாயங்களை விளக்குவது முறையானது. எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவர் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கும் உரிமை உள்ளது என்றார்.