புது தில்லி: நாடு முழுவதும் நதிநீர் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயத்தை அமைக்கும் மசோதா மக்களவையில் புதனன்று நிறைவேற்றபட்டது.
இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பிறகு நதிநீர் தொடர்பான எல்லா விவகாரங்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கவனிக்கும் வகையில், ஜல்சக்தி என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது. கஜேந்திர சிங் ஷெகாவத் அதற்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அதையடுத்து நாடு முழுவதும் வெவேறு மாநிலங்களுக்கிடையே நிலவும் நதிநீர் பிரச்சனைகளைத் தீர்க்க தனித்தனியாக தீர்பாயங்கள் அமைக்கப்படுவதற்கு பதிலாக ஒரே தீர்ப்பாயம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு வழிசெய்யும் மசோதாவை, ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் மக்களவையில் தாக்கல் செய்தார்.
அதன் மீதான விவாதத்தின்போது இத்தகைய தீர்ப்பாயம் அமைந்தால், தமிழகம் போராடிப் பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் நிலை என்னாகும் என்று மத்திய சென்னை எம்.பியான தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து கஜேந்திர சிங், 'நதிநீர் பிரச்னைகளுக்காக ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்பட்டாலும், காவிரி மேலாண்மை ஆணையம் தனது பணியைத் தொடரும்; நதிநீர் தீர்ப்பாய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகும் தற்போதைய நிலையே தொடரும்' என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீண்ட விவாதத்திற்குப் பிறகு இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.