புது தில்லி: மாநில முதல்வருக்கு எதிராக கருத்துத் தெரிவித்தால் அது என்ன கொலைக்குற்றமா? என்று உத்தர பிரதேச அரசை நோக்கி உச்ச நீதிமன்றம் கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளது.
உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக பிரபல சமூக வலைதளமான முகநூலில் தில்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர் பிரசாந்த் கனோஜி என்பவர் கருத்துக்களை பதிவிட்டார். இதன் காரணமாக உ.பி மாநில காவல்துறை அவரைக் கைது செய்தது. பின்னர் லக்னௌ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவ்ருக்கு, நீதிமன்றமானது 11 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிராக எதிராக பிரசாந்த் கனோஜியின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றமானது உ.பி. அரசின் நடவடிக்கைகளின் மீது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியது.நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களாவது:
எந்த அடிப்படையில் பத்திரிகையாளரை கைது செய்தீர்கள்? இந்தக் கைது நடவடிக்கையை சரியானதாக கருதுகிறீர்களா? அவர் என்ன கொலைக்குற்றம் செய்து விட்டாரா? ஒரு அவதூறு வழக்கிற்காக நீதிமன்ற காவலில் வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? லக்னௌ மாஜிஸ்திரேட் தவறான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஒவ்வொரு தனிநபருக்கும் இந்தநாட்டில் தன்னுடைய கருத்தை சுதந்திரமாக தெரிவிக்கும் உரிமையுள்ளது. சில நேரங்களில் சில விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டியவையாக இருக்கும். அதற்காக கைது செய்வீர்களா? இப்படித்தான் எதற்கெடுத்தாலும் கைது நடவடிக்கை எடுப்பீர்களா? ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவில் வழக்குப்பதிவு என்பது எப்படி சரியாகும்?
இவ்வாறு கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்திய நீதிமன்றம், பத்திரிக்கையாளர் பிரசாந்த் கனோஜியாவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அதேநேரம் ஜாமீன் வழங்கியதால் பிரசாந்த் கனோஜியாவின் கருத்தை ஏற்றுக்கொள்கிறோம் என அர்த்தம் கிடையாது எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.