புது தில்லி: அனைத்து எதிர்க்கட்சிகளும் பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி மக்களவையில் பேசியுள்ளார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய மத்திய அமைச்சரும், முதல் தடவையாக எம்.பி ஆகியிருப்பவருமான் ஒதிஷாவின் பிரதாப் சந்திர சாரங்கி, 'காங்கிரஸ் ஆட்சிக்காலம் நிர்வாகத் திறமையின்மை மற்றும் ஊழல்களால் நிரம்பியது’ என்று கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசியதாவது:
மக்களவைத் தேர்தல் சமயத்தில் பொதுமக்களிடம் பிரதமரைப் பற்றி தவறான பரப்புரை நிகழ்தியதற்காக, எதிர்க்கட்சிகள் அனைத்தும் பிரதமர் மோடியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
தாங்கள் அடைந்துள்ள கடுமையான தோல்வி குறித்து எதிர்க்கட்சிகள் மறு ஆய்வு செய்ய வேண்டும். அதேசமயம் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடியை தாராளமாகப் புகழ வேண்டும்.
மோடியை தோற்கடிப்பதற்காகக் கூடிய எதிர்கட்சிகளின் கலப்படக் கூட்டணிகளை மக்கள் புறக்கணித்து விட்டு, தூய்மையானதைத் தேர்வு செய்துள்ளார்கள்.
எதிர்க்கட்சிகள் மோடி மீது பொறாமை கொண்டுள்ளார்கள். அவர்கள் இந்தியாவைத் துண்டாட நினைப்பவர்களுடன் கூட்டணி சேரக் கூடாது. அத்தகையோருக்கு வரலாற்றில் இடம் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.