FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

காவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்

காவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? என்று சீமான் தெரிவித்துள்ளது பற்றி...

News image

முதல்வர் விஜய் | சீமான் - கோப்புப் படம்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 6:27 pm IST

காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஆகஸ்ட் 4) கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசியதாகத் தொடரப்பட்ட புகார்களில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டு தஞ்சை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

காவிரி நதிநீர்ச்சிக்கல் உச்சம்பெற்று, மேக்கேதாட்டில் அணை கட்டுவதில் மிகுந்த முனைப்போடு, அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கர்நாடக அரசும், அங்குள்ள எதிர்க்கட்சிகளும் ஒருமித்துச் செயல்பட்டு, முன்னெடுப்புகளைச் செய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அரங்கேறி வரும் அரசியல் காட்சிகள் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்ததுதான் அரசாங்கம் எனும் அடிப்படையை மறந்து, இருவரும் பகைமை பாராட்டுவதும், காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதும், அரசியல் பழிவாங்கல் செய்வதும்தான் ஆட்சி நிர்வாகமா? மக்களுக்கான அரசியலா? என்ற கேள்வி எழுகிறது. தற்போது நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமான தலைகுனிவாகும்.

காவிரி நதிநீர்ச்சிக்கல் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்வைத்த சில கருத்துகள் தேவையற்றவை; எதிர்க்கட்சித்தலைவர் எனும் பதவிக்குரிய மாண்பை மறந்து, கண்ணியக்குறைவான கருத்துக்களை பொதுஅவையில் வைத்திருக்க வேண்டியதில்லை. அதேசமயம், இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, கைதுநடவடிக்கை எனும் பெயரில் தவெக அரசு இறங்குவதும் ஏற்புடையதல்ல. அரசியல் மேடைப் பேச்சுக்கெல்லாம், தவெக அரசு கைது நடவடிக்கை எடுக்குமென்றால், என் மீதும், என் தம்பி, தங்கைகள் மீதும் தனிநபர் விமர்சனமும், அவதூறும், ஆபாசத்தாக்குதலும் நாள்தோறும் தொடுக்கும் தவெகவினர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது ஏன்?

அவ்வாறு அவதூறு பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் நீதியரசரே, சட்ட நடவடிக்கை எடுக்கச் சொல்லி, உத்தரவு கொடுத்துவிட்டப் பிறகும், கைது செய்யாது விட்டிருப்பதேன்? அவர்கள் தவெகவின் ஆதரவாளர்கள் என்பதாலா? இன்று காலை 9 மணிக்குப் புகார் கொடுத்து, இரண்டு மணி நேரத்தில் முற்பகல் 11 மணிக்கெல்லாம் உதயநிதியைக் கைதுசெய்கிற காவல்துறையினர், என்னைப் பற்றி அவதூறுப் பரப்பியவர்களை இத்தனை நாட்களாகியும் கைதுசெய்யாது, காப்பாற்றுவது ஏன்? என்னைப் பற்றி மேடையில் ‘சீமான் பழைய சாமான்’ என்று தரம்தாழ்ந்து பேசிய லயோலா மணி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அப்படி பேசியதை ஊக்கப்படுத்தும் விதமாக பாடநூல் கழகத் தலைவராக அரசுப்பதவி கொடுத்து அழகுபார்ப்பதற்கு பெயரென்ன முதல்வரே?

இதுதான் உங்களின் நாகரீக அரசியலா? என் மீதும், என் தம்பிகள் மீதும் கடந்தகாலத்தில் முந்தைய திமுக அரசு பாய்ச்சாத வழக்குகள் இல்லை; ஏவிவிடாத கைது நடவடிக்கைகள் இல்லை. ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட வழக்குகளை திமுகவின் ஆட்சியிலேயேதான் பெற்றிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் கைது என்று முந்தைய திமுக அரசு, கடைப்பிடித்த அதிகார அடக்குமுறையையே தவெக அரசும் கடைப்பிடிக்குமென்றால், இதுதான் சனநாயக ஆட்சியா? இதுதான் மக்களுக்கான மாற்று அரசியலா? மக்களுக்குத் துளியும் நலன்பயக்காத, தரம்தாழ்ந்த அரசியல் நடைபெற்று வருவதைப் பார்க்கிறபோது மனவலியைத் தருகிறது. முந்தைய திமுகவின் ஆட்சிபோலவே, எல்லாவற்றிற்கும் கைது என தவெகவின் அரசு கிளம்புவது துளியும் சகிப்புத்தன்மையற்ற போக்காகும். மேடைதோறும் திமுகவை தீயசக்தியென விமர்சித்துவிட்டு, திமுக கடந்த காலத்தில் செய்த கொடுங்கோன்மையை நிகழ்காலத்தில் தவெக அரசு கட்டவிழ்த்துவிடுவது எந்தவிதத்தில் மாற்று அரசியலாகும்?

திருவைகுண்டம் தொகுதியின் தவெகவின் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் மீதும், இன்னபிற தவெகவின் நிர்வாகிகள் மீதும் பாலியல் புகார்கள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு, இதுவரை விசாரணை செய்யக்கூடாத நிலையில், இந்த விவகாரத்தில் மட்டும் இவ்வளவு வேகம் காட்டுவதேன்? காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை, கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? காவிரிப்படுகையில் குறுவை சாகுபடிப் பொய்த்து, சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியிருக்கும் நேரத்தில், அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி நதிநீர் விவகாரத்தில் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகளைச் செய்யாது, தவெக அரசு தான்மையுடன் வறட்டுத்தனமான செயல்பாடுகளில் ஈடுபட்டு, தமிழ்நாட்டின் கவனத்தை ஒட்டுமொத்தமாகத் திசைதிருப்பி இருப்பது வெட்கக்கேடானது.

காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு ஆளுங்கட்சி காட்டுவதும், காவிரிக்காக தீவிரமாக போராட வேண்டிய சமயத்தில் எதிர்க்கட்சியான திமுக கைதுக்கு எதிராக போராடிக் கொண்டிருப்பதுமான தமிழ்நாட்டின் அரசியல் நிலை சாபக்கேடானதாகும். சகிப்புத்தன்மையே ஜனநாயகத்திற்குத் தேவையான அடிப்படை என்பதை மறந்து, அரசியல் மேடைகளில் பேசுவதற்கெல்லாம் கைது நடவடிக்கை என்பதை எந்த அரசு செய்தாலும் அது மிகத்தவறானது; மேடைகளில் தவறாகப் பேசினால், அவதூறு வழக்கு தொடுக்க வேண்டுமே ஒழிய, எடுத்த எடுப்பிலேயே கைதென இறங்குவது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என தவெக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Seeman, the coordinator of the Naam Tamilar Katchi, questioned today (August 4) why the Chief Minister is showing such alacrity regarding the arrest action, a speed that was notably absent when dealing with the Cauvery river water dispute.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.