தள்ளாடி வந்த மணமகன்: திருமணத்தை நிறுத்திய பழங்குடியினப் பெண்ணுக்குக் குவியும் பாராட்டுகள்

ஒடிசா மாநிலம் ஜுஜுமுரா பகுதியில் கோபர்தன் பாத்மல் கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பழங்குடியினப் பெண் மமதா போய். 
தள்ளாடி வந்த மணமகன்: திருமணத்தை நிறுத்திய பழங்குடியினப் பெண்ணுக்குக் குவியும் பாராட்டுகள்
Updated on
1 min read


சம்பல்புர்: ஒடிசா மாநிலம் ஜுஜுமுரா பகுதியில் கோபர்தன் பாத்மல் கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பழங்குடியினப் பெண் மமதா போய். 

இவர் கடந்த மே மாதம் 12ம் தேதி தனக்கு நடக்கவிருந்த திருமணத்தைக் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தியதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று கௌரவிக்கப்பட்டார்.

போதைப் பொருள் மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாளை முன்னிட்டு சம்பல்புர் மாவட்ட ஆட்சியர் சுபம் சக்ஸேனா தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மமதா போய் கௌரவிக்கப்பட்டார்.

மே 12ம் தேதி திருமணம் நடைபெறும் நேரத்தில் மங்கல நாண் மமதாவின் கழுத்தில் ஏற இருந்த அந்த இனிய தருணத்தில், குடித்துவிட்டு போதையில் வந்த மணமகனைப் பார்த்த மணமகள் அதிர்ந்து போனார். இதுதான் நம் தலையெழுத்து என்று கழுத்தை நீட்டாமல், ஒரு குடிகாரனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அதிரடியாக முடிவெடுத்து குடும்பத்தாரிடம் கூறி திருமணத்தை நிறுத்திவிட்டார்.

இதனை வரவேற்கும் வகையில், மாவட்டம் முழுக்க மமதாவின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. சால்வை, பரிசு பொருள், பூங்கொத்துடன் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணம் கொடுத்து மமதா கௌரவிக்கப்பட்டார்.

தனது அதிரடி முடிவு குறித்து மமதா கூறுகையில், திருமணத்தின் போது எல்லோரையும் போல எண்ணற்றக் கனவுகளுடன்தான் தயாரானேன். ஆனால், மணமகன் நிற்கக் கூட முடியாத நிலையில் வந்ததைப் பார்த்து அதிர்ந்து போனேன். நிச்சயம் இவரைத் திருமணம் செய்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையாது என்பது புரிந்து போனது. அப்போது நான் எடுத்த தைரியமான முடிவை நினைத்து இப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

அப்போது அந்த முடிவை எடுப்பதில், மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த மமதாவின் குடும்பத்துக்கு கடினமானதாக இருந்த போதும், மமதாவின் முடிவுக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருந்தனர்.

தற்போது அவருக்கும், ஜர்சுகுடா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் ஜூலை 8ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகவும், அந்த இளைஞருக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை என்பதை குடும்பத்தினர் உறுதி செய்திருப்பதாகவும் மமதாவின் உறவினர் கூறுகிறார். 

இது குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய காவல்துறை எஸ்பி சஞ்சீவ் அரோரா, மமதாவின் செயல் வரவேற்கத்தக்கதாக உள்ளது. இது பலருக்கும் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் போது எந்த அளவுக்கு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதையும் காட்டுகிறது என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com