சென்னை: மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 15 நாட்களில் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணத்தின் மதிப்பு எவ்வளவு என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தேதிகளை மார்ச் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதையடுத்து நாடு முழுவதும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி வாகன சோதனைகளைத் தொடங்கினர். இவ்வாறு கடந்த 15 நாட்களில் பறக்கும் படையினர் நாடு முழுவதும் நடத்திய சோதனைகளில், பணம், மதுபான பாட்டில்கள், தங்கம், வெள்ளி மற்றும் பல்வேறு இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தேர்தல் பறக்கும் படையினரால் கடந்த 15 நாட்களில் கணக்கில் தெரிவிக்கப்படாத ரூ.540 கோடி மதிப்பிலான பணம், தங்கம், மது மற்றும் இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் ரூ.107.24 கோடி மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அடுத்த இடத்தில் உள்ள உத்தரபிரதேசத்தில் ரூ.104.53 கோடியும், ஆந்திராவில் ரூ.103.40 கோடியும், பஞ்சாப்பில் ரூ.92.80 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு, பணத்தின் மதிப்பு ரூ.539.99 கோடியாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.