புது தில்லி: குட்டைப்பாவாடை அணியும் பெண்கள் பலாத்காரம் செய்வதற்குத் தகுதியானவர்கள் என்று தில்லி உணவகம் ஒன்றில் இளம்பெண்களை விமர்சித்த மற்றொரு பெண்ணின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.
தில்லியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கு, குட்டைப்பாவாடை அணிந்து பெண் ஒருவர் தனது தோழிகளுடன் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த நடுத்தர வயதுப் பெண் ஒருவர் அந்த இளம் பெண்களை அவர்களது உடையைக் காரணமாகி காட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அந்த இளம்பெண்ணின் உடை குறித்து கேலி செய்த மற்றொரு பெண், அருகில் இருந்த ஆண்களிடம் நீங்கள் இவர்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இப்படி உடை அணிந்து வருகிறார்கள் என்றும், இவர்கள் எல்லாம் நீங்கள் பலாத்காரம் செய்வதற்குத் தகுதியானவர்கள் என்றும் தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.
அத்துடன் அந்த பெண்ணை மானபங்கப்படுத்தி பாடம் புகட்டுமாறு அங்கிருந்த ஆண்களையும் அவர் அழைத்ததாகத் தெரிய வருகிறது.
இதைக்கேட்ட அந்த இளம்பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆத்திரமடைந்த அவர்கள் ஆடை குறித்து தரக்குறைவாக விமர்சித்த பெண், உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் கடைசிவரை அந்த நடுத்தர வயதுப் பெண்மணி தனது கூற்றுக்கு மன்னிப்பு கேட்டகவே இல்லை.
அப்போது அங்கிருந்த இளம்பெண்கள் எடுத்த விடியோவானது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இதுகுறித்து காவல்துறையிடம் அந்த இளம்பெண்கள் புகார் செய்வார்கள் என்று தெரிகிறது.