
புது தில்லி: எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ.10 கோடி கொடுத்து தங்கள் வசம் இழுக்க பாஜக முயற்சி செய்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
மத்திய பாஜக அரசுக்கு தங்கள் ஆட்சியில் வளர்ச்சிக்கான விஷயம் என்று கூறுவதற்கு எதுவும் இல்லை. எனவேதான் தற்போது அக்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது.
தற்போது எங்களது கட்சியின் 7 எம்.எல்.ஏ.க்களை தலா ரூ.10 கோடிக்கு விலைக்கு வாங்க பா.ஜ.க. முயற்சிக்கிறது.
இதற்கு முன்னரும் கூட அக்கட்சி எங்களது எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சித்தது. ஆனால் அப்போது தேர்தலில் அவர்களுக்கு பொதுமக்கள் சரியான பதிலை வழங்கினர். இந்த முறையும் அவர்களது நடவடிக்கைக்கு உரிய பதில் கிடைக்கும்.
மேற்கு வங்க தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களைப் பற்றிப் பேசியது சரியல்ல. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அதனாலேயே தற்போது தான் பதவியில் இருப்பதை பிரதமர் மோடி உணர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் சிசோடியாவின் இந்த குற்றச்சாட்டை பா.ஜ.க. மறுத்துள்ளது. பாஜகவின் தில்லி ஊடக பிரிவு தலைவர் அசோக் கோயல் பேசும்போது, 'தனது கட்சியின் எதிர்ப்பு எம்.எல்.ஏ.க்களை தடுத்து நிறுத்த அரவிந்த் கெஜ்ரிவாலால் முடியவில்லை; எனவேதான் அவர்களது கட்சியின் உள்விவகாரங்களில் பாஜக.வின் பெயரை தேவையின்றி இழுக்கின்றார்கள்' என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.