போபால்: வழக்குரைஞரான தனது கணவரைக் கொன்று, அவரை வீட்டின் சமையலறைக்குள் பள்ளம் தோண்டி புதைத்துவிட்டு, கடந்த 10 நாட்களாக வழக்கம் போல சமையல் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவரை எங்கே என்று அக்கம் பக்கத்தினர் கேட்டு துளைத்து வந்த நிலையில், 4 குழந்தைகளுக்கு தாயான பிரதிமா பனவால் மௌனம் கலைத்தார்.
கொலையான கணவர், அவரது சகோதரரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்ததால், கணவரின் சகோதரருடன் சேர்ந்து கணவரைக் கொன்று புதைத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ராஜேந்திரகிராம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றும் 40 வயதாகும் மோஹித் பனவால், மத்தியப் பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டம் கரோடா டோலா கிராமத்தில் வசித்து வந்தார். இவர் நவம்பர் 11ம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது சகோதரர் கனராம் புகார் அளித்த நிலையில், அவர் கொன்று புதைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
உணவில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து, அவர் மயங்கியதும் தானும், அவரது சகோதரர் கனராமும் மின்சார வயரால் அவரது கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, சமையலறையில் பள்ளம் தோண்டி புதைத்து விட்டோம். யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக, அங்கே மண் அடுப்பைக் கட்டியதாக மனைவி கூறியுள்ளார். அந்த அடுப்பில்தான் கடந்த 10 நாட்களாக குடும்பமே சமையல் செய்து சாப்பிட்டு வருகிறது.
காவல்துறையினர் உடலை தோண்டி எடுத்த போது, சரியாக தலைக்கு நேராக அடுப்பு அமைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து காவலர்கள் அதிர்ச்சிய அடைந்தனர்.