புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்க நான் தடையாக இல்லை: ஆளுநர் கிரண்பேடி
புதுச்சேரி: புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்க நான் தடையாக இல்லை என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுவையில் நியாயவிலைக் கடைகளில் இலவச அரிசி வழங்கப்படாதது தொடர்பாக சட்டப்பேரவையில் இரு நாள்களாகக் கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. ஆளுநர் பணமாகத் தர வேண்டும் என்று குறிப்பிட்டு, அரிசி வழங்கும் கோப்பை நிறுத்தி வைத்துள்ளதாக முதல்வர் நாராயணசாமியும், சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமியும் பேரவையில் தெரிவித்தனர்.
பின்னர் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் குழுவினர் துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு சனிக்கிழமை பிற்பகல் சென்றனர். தொடர்ந்து அவர்கள், ஆளுநர் கிரண் பேடியைச் சந்தித்துப் பேசினர்.
பின்னர், வெளியே வந்த முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாங்கள் அனைவரும் ஆளுநர் கிரண் பேடியைச் சந்தித்துப் பேசினோம். அப்போது, சட்டப்பேரவையில் இலவச அரிசி வழங்குவது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை அவரிடம் கொடுத்தோம். அரிசி வழங்க ஏற்கெனவே அமைச்சர் கந்தசாமி அனுப்பிய கோப்புக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். இதற்காக 6 மாதங்களுக்கு ரூ. 160 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார்.
இந்நிலையில் புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்க நான் தடையாக இல்லை என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்க நான் தடையாக இல்லை.
மக்கள் தரமான அரிசியை வாங்கிக் கொள்ள இலவச அரிசிக்கு பதில் பணமாக வழங்கக் கூறினேன்
இலவச அரிசி வழங்க நான் தடையாக இருக்கிறேன் என்ற பரப்புரை தவறானது
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.