ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்களில் உள்ள ஊழியர்கள், டிக்கெட் தொகை போக, மீதி சில்லறைத் தொகையை கொடுக்காதது குற்றமாகாது என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள் எப்போதுமே பரபரப்பாக காணப்படும். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்துசெல்வர்.
இதில், பெரும்பாலாக அனைவருமே அவசர கதியில் தான் டிக்கெட் வாங்க வருவார்கள். அதிலும், முக்கிய ரயில்கள் புறப்பட சில நிமிடங்களே இருக்கும்போது, டிக்கெட் கவுண்டரில் உள்ள ஊழியர்கள் நிலைமை மோசம் தான். இதில் ஊழியர்கள், டிக்கெட் தொகை போக, மீதிச் சில்லறைத் தொகையை சரியாக வழங்குவதில்லை என்ற புகார்களும் ரயில்வே மண்டலங்களுக்கு அதிகமாக வந்துள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள தகவலில், ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் உள்ள ஊழியர்கள் டிக்கெட் தொகை போக, மீதிச் சில்லறையை தரவில்லை எனில் அது குற்றமாக கருதப்படாது. அவசர நேரத்தில் பயணிகளே சிலர் அதனை விட்டுச் செல்கின்றனர். கூட்டம் அதிகமாக இருக்கும் சமயத்தில் டிக்கெட் கவுண்டரில் உள்ளவர்களும் மிகவும் பரபரப்பாக இருப்பார்கள்.
எனவே, மீதித்தொகையை கொடுக்கவில்லை என்பதற்கு ஆதாரம் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். இதனைத் தவிர்க்க, முறையாக சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்கலாம் அல்லது உங்களுக்குக் கொடுக்க வேண்டிய சில்லறைத் தொகையை ரயில்வே ஊழியரிடம் கேட்டுப்பெறுவதைத் தவிர வேறுவழியில்லை. இதனால், 'சில்லறைத் தொகையை கொடுக்கவில்லை; ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாய்வழியாக கூறுவது ஏற்றுக்கொள்ளப்படாது' என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.