

சென்னை: கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆட்டோமொபைல் துறை பின்னடைவை சந்தித்திருப்பதாகவும், வாகன விற்பனை சரிவடைந்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆனால், இதற்கு ஒலா, உபர் போன்ற செல்போன் செயலிகள் மூலம் இயங்கும் வாடகைக் கார் நிறுவனங்களும் காரணமாக இருக்கின்றன என்று மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 100 நாள்கள் சாதனைகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதில் பங்கேற்ற அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மூன்று மாதங்களில் மத்திய அரசு மேற்கொண்ட சிறப்புத் திட்டங்கள், சீர்திருத்த நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பட்டியலிட்டார். அதைத் தொடர்ந்து அவரிடம் பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அவற்றுக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.
அப்போது அவர் வாகன விற்பனை சரிவு குறித்து பேசுகையில், வாகன விற்பனை சரிவுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒருவர் சொந்தமாக கார் வாங்கி அதற்கு மாதந்தோறும் மாதத் தவணைக் கட்டுவதற்கு பதிலாக, தேவைப்படும் போது ஓலா அல்லது உபர் கால் டாக்ஸியைப் பயன்படுத்திக் கொள்வதே எளிது என்று நினைக்கலாம். இதுபோல லட்சக்கணக்கானோர் நினைப்பதால் வாகன விற்பனை சரிவடையலாம். இதுபோல பல காரணங்கள் வாகன விற்பனை சரிவுக்குக் காரணங்களாக அமைந்துள்ளன என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.