இந்திய-ஸ்விஸ் ஒத்துழைப்புக்கு ஏராளமான வாய்ப்புகள்: ராம்நாத் கோவிந்த்

பெர்ன் முதல் பெங்களூர் வரையிலும், ஆய்வுக் கூடங்கள் முதல் உற்பத்திக் கூடங்கள் வரையிலும் இந்தியா-ஸ்விட்சர்லாந்து இடையே அறிவியல் - தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைத்துச் செயல்பட
ஸ்விட்ஸர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள பெர்ன் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
ஸ்விட்ஸர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள பெர்ன் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
Published on
Updated on
1 min read


பெர்ன் முதல் பெங்களூர் வரையிலும், ஆய்வுக் கூடங்கள் முதல் உற்பத்திக் கூடங்கள் வரையிலும் இந்தியா-ஸ்விட்சர்லாந்து இடையே அறிவியல் - தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைத்துச் செயல்பட ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
அவர் ஐஸ்லாந்து, ஸ்விட்சர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய மூன்று நாடுகளில் 9 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் ஐஸ்லாந்து சென்று அந்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்த பின், ராம்நாத் கோவிந்த், ஸ்விட்சர்லாந்துக்கு வியாழக்கிழமை வந்தார். அந்நாட்டின் பெர்ன் நகரில் உள்ள பிரபலமான பெர்ன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது:
பெர்ன் முதல் பெங்களூரு வரையிலும், ஆய்வுக் கூடங்கள் முதல் உற்பத்திக் கூடங்கள் வரையிலும் இந்தியா, ஸ்விட்சர்லாந்து இடையே பல்வேறு துறைகளில் கூட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரு நாடுகளும் மேலும் ஒத்துழைத்துச் செயல்பட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு பல காலத்துக்கு முன்பே கலாசாரப் பரிவர்த்தனைகள் இருதரப்பு ஒத்துழைப்புக்கு வழிவகுத்தன. ஸ்விஸ் வால்கார்ட் வர்த்தக நிறுவனம் இந்தியாவில் 19ஆம் நூற்றாண்டில் தனது அலுவலகத்தைத் தொடங்கியபோது இந்தப் பரிவர்த்தனைகள் தொடங்கின. அப்போது முதல் இரு நாட்டு உறவுகள் நெடிய பயணத்தைக் கடந்து வந்துள்ளன. சென்னையில் ஸ்விஸ் நாட்டு உதவியுடன் அமைக்கப்பட்ட ரயில் பெட்டித் தொழிற்சாலை கடந்த 2015இல் வைர விழா கொண்டாடியது.
இன்று இந்தியாவில் 250-க்கும் மேற்பட்ட ஸ்விஸ் நிறுவனங்கள் இயங்குகின்றன. அதேபோல் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச், பேசல் மற்றும் பெர்ன் நகரங்களில் இயங்குகின்றன. 
இந்தியா-ஸ்விஸ் இடையிலான உறவுகளின் மையமாக அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவை வேகமாக உருவெடுத்து வருகின்றன. இரு நாடுகளையும் சேர்ந்த 80 அறிவியல் கல்வி நிறுவனங்களும், 300 ஆராய்ச்சியாளர்களும் கூட்டுத் திட்டங்களில் இணைந்திருப்பதைக் குறிப்பிட விரும்புகிறேன் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com