
கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி சார்பில் கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவதற்காக, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ பல்கலைக்கழகத்துக்கு வந்தார்.
அவரை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி எஸ்எஃப்ஐ, ஏஎஃப்எஸ்யு ஆகிய இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் முற்றுகையிட்டு, கறுப்புக் கொடிகளைக் காண்பித்து, திரும்பிச் செல்லுமாறு கோஷங்களை எழுப்பினர்.
பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தி முடித்துவிட்டு வெளியே வந்தபோதும், அவரது காரை வழிமறித்துக் கொண்டு இடதுசாரி மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் மத்திய அமைச்சர் தாக்கப்பட்டார். மேலும் அங்கிருந்த வானங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
மத்திய அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அவர் தாக்கப்பட்டது குறித்து அறிந்த மாநில ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஜகதீப் தன்கர், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு விரைந்தார்.
இது மாநிலத்தின் சட்டம்-இழுங்கு நிலைமையை பிரதிபலிக்கிறது என்று விமர்சித்ததோடு, பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றத்தைத் தணிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலருக்கு ஆளுநர் ஜகதீப் தன்கர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட தங்கள் அரசின் ஒப்புதல் பெறாமலேயே, தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மத்திய அமைச்சரை மீட்க மாநில ஆளுநர் சென்றுள்ளது அதிர்ச்சியளித்துள்ளதாகவும், மேலும் அது தேவையற்ற செயல் எனவும், பல்கலை.யில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ தங்களிடம் உரிய அனுமதி கோரவில்லை எனவும் திரிணமூல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.