கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், வியாழக்கிழமை (ஏப்.4) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 2019 மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக உத்தரப்பிரதேசத்தின் அமேதி மட்டுமல்லாது கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல், பேசியதாவது:
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று எந்த திசையானாலும், இந்தியா ஒரே நாடு என்பதை நிரூபிக்க தான் நான் கேரளாவில் களமிறங்குகிறேன். மத்திய அரசு, பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் ஆகியன தென்னிந்தியாவின் கலாசாரத்துக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. எனவே அதை எதிர்த்து, தென்னிந்திய மக்களுடன் இருக்கவே நான் இங்கு போட்டியிடுகிறேன்.
காங்கிரஸ் கட்சிக்கும், இடதுசாரி கட்சிகளுக்கும் இடையே இங்கு போட்டி ஏற்பட்டுள்ளது. இது பிற்காலத்திலும் தொடரலாம். எனவே கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் என்னை வசைபாடலாம், விமர்சிக்கலாம். ஆனால், இங்கு நடைபெறும் எனது தேர்தல் பிரசாரங்களின் போது நான் அவர்களுக்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன்.
ஆனால், எனக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்வைக்கும் அனைத்து விமர்சனங்களையும் எதிர்கொண்டு அவற்றுக்கு பதிலடி கொடுப்பேன் என்பதை மட்டும் நான் கேரள மக்களிடம் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.