புது தில்லி: பொருளாதார மந்த நிலையால் கார் விற்பனை சரிந்து வரும் நிலையில், அதனை ஊக்குவிக்க கார் கடனுக்கான பிராஸஸிங் கட்டணத்தை நீக்குவதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.
விழாக் கால சலுகையாகவும், பண்டிகைக் காலங்கள் நெருங்குவதால் கார் விற்பனையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க எஸ்பிஐ வங்கி முடிவு செய்துள்ளது.
அதன்படி, கார் கடன் வழங்குவதற்கான பிராஸஸிங் கட்டணத்தை நீக்கியிருப்பதோடு, கார் கடனுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதமான 8.70% ஐயும் அறிமுகம் செய்துள்ளது.
எஸ்பிஐயின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து மேலும் சில பொதுத் துறை வங்கிகளும், கார் கடன்களுக்கு சலுகைகள் வழங்க முன் வந்துள்ளன.
இந்திய வாகன உற்பத்தித் துறை எதிர்பாராத வகையில் மந்தநிலையை எதிர்கொண்டுள்ளது. இதனால் கார் உற்பத்தி ஆலைகளிலும், கார் உதிரிபாக உற்பத்தி ஆலைகளிலும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கார் விற்பனையை அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.