சபரிமலை செல்லும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பிந்து, பாத்திமா உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, தற்போதைய சூழலில், சபரிமலை செல்லும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது. இதுதொடர்பாக மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் வரை பிந்து அம்மினி, ரெஹானா பாத்திமா ஆகிய இருவருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். சபரிமலை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது. இருப்பினும் அந்த தீர்ப்பு மீதான மறுஆய்வு மனுக்கள் 7 பேர் அமர்வில் விசாரணைக்கு உள்ளது. எனவே அங்கு வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுவதை உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை என தலைமை நீதிபதி போப்டே தெரிவித்தார்.
முன்னதாக, சபரிமலையில் வழிபட அனைத்து வயதுப் பெண்களுக்கும் அனுமதி அளித்து கடந்த ஆண்டு வழங்கிய தீா்ப்பு இறுதியானது அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும் இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுக்கள் 7 நீதிபதிகள் அமா்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.